Thursday, October 5, 2023

பஞ்ச நரசிம்ம க்ஷேத்ர பயணம் (30 Sep - 2 Oct 2023)

 


மங்களகரமாக மங்களகிரியில் துவங்கியது எங்கள் பஞ்ச நரசிம்ம க்ஷேத்ர பயணம். சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு ரயிலில் வந்து அங்கிருந்து இரண்டு பேருந்துகளில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள் அமிர்தம் திவ்ய தேசம் யாத்ரா குழுவினர். அதன்படி அதிகாலை விஜயவாடாவில் இறங்கிய உடனே மங்களகிரி சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைகளில் குளித்து உடைமாற்றி கோவிலுக்குச் செல்ல தயாரானோம்.


மங்களகிரியில் மூன்று நரசிம்ம ஸ்வாமி கோவில்கள் உள்ளன.  ஒன்று, அடிவாரத்தில் அமைந்துள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்.  மிக வித்தியாசமான நெடிய அமைப்புடனான கோபுரத்தைக் கொண்ட அழகிய கோவில் இது. இந்த கோபுரத்தின் சாயலில்தான் கர்நாடகாவில் முர்தேஷ்வர் கோவில் கோபுரமும் வடிவமைத்தார்களோ என்ற எண்ணம் இந்த இரண்டு கோபுரங்களையும் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தோன்றும். அதிகாலை என்பதனால் அவ்வளவாக கூட்டம் இல்லை.  ஸ்வாமியையும் ராஜ்யலக்ஷ்மி தாயாரையும் தரிசித்துக்கொண்டு சற்று உயரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பானக நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு விரைந்தோம்.  


   


600-700 படிகள் கொண்ட பாதை இருந்தாலும் பயணிகளில் பெரும்பாலோர் அந்தஸ்த்தானவர்கள் (மூத்த குடிமக்கள்) என்பதாலோ என்னவோ மலைக்குச் செல்ல தலா ஆறுபேர் அமரும் ஆட்டோக்களை அமர்த்தி அனுப்பி வைத்தனர். யானை வடிவத்தில் உள்ள கண்டல மலையில் உள்ள இக்கோவில் மிகவும் பிரசித்தமானது. அதற்குக் காரணம் இங்குள்ள நரசிம்மர் எவ்வளவு பெரிய அல்லது சிறிய பாத்திரத்தில் பானகம் கொடுத்தாலும் அதில் சரிபாதி அளவே வாங்கிக் கொண்டு மீதியை ஏற்றுக் கொள்வதில்லை என்னும் அதிசயம்தான்.  தனியாக சிலை என்று ஒன்றில்லாமல் மலையில் சுயம்புவாக அமைந்துள்ள ஒரு துவாரத்தை வாயாகக் கொண்டு அதைச் சுற்றி நரசிம்மர் முகத்தை உலோகத்தில் அமைத்துள்ளனர்.  அந்த துவாரத்தில் பானகம் உட்செலுத்தும்போது நாம் விழுங்குவது போலவே களக் களக் என்று ஓசை வருமாம். பாதியளவு சென்ற பின் சப்தம் நின்று சிறிது பானகம் துவாரத்திலிருந்து வெளிவந்து விடுமாம்.  வெளிவரும் அந்த பானகத்தோடு கையில் மீதமிருக்கும் பானகத்தையும் சேர்த்து நமக்கே பிரசாதமாக கொடுத்து விடுகின்றனர்.


இதில் இன்னுமொரு அதிசயம் என்னவென்றால் இந்த மலையில் தண்ணீர் வசதி கிடையாது. அருகிலிருக்கும் சுனையிலிருந்து நீரைச் சுமந்து வந்து வெல்லம் மிளகு கரைத்து பானகம் தயாரிக்கிறார்கள். கரைக்கும் இடத்திலும் சரி, சுற்றிலும் பானகம் சிந்தும் இடத்திலும் சரி, ஒரு ஈ எறும்புகூட வருவதில்லை என்பதே அந்த அதிசயம். இரண்டு லிட்டர் பானகம், கற்கண்டு (95%) முந்திரி (5%) கலந்த ஒரு சிறு பாலித்தீன் பாக்கெட், லாமினேட் செய்யப்பட்ட சிறிய படம் ஆகியவை சேர்த்து 90 ரூபாய். தரிசனம் முடிந்த பின் பானகத்தை நமக்கே டம்ளரில் ஊற்றிக் கொடுக்கிறார்கள். அது நீண்ட நேரம் நிற்காது, புளித்துவிடும் என்பதால் ஊருக்கு எடுத்துச் செல்ல பரிந்துரைப்பதில்லை. ஸ்வாமி பானகம் ஏற்றுக்கொள்வது ஒரு அதிசயம் என்றால், ஒவ்வொருநாளும் ஓயாமல் பக்தர்கள் தரும் பானகம் எல்லாம் எங்கே போய் சேர்கிறது என்பதுவும் விளங்காத ஒரு அதியசம்.  சக பிரயாணி ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டேன்.  அவரது பதில் என்னை வியப்பிலாழ்த்தியது - ஸ்வாமி ஸ்வீகரிச்சுண்டார், அவ்வளவுதான்!


கூட்டம் காரணமாகவோ என்னவோ, சொம்பு நிறைய நாம் தரும் பானகத்தை அப்படியே ஸ்வாமி வாய் துவாரத்தில் ஊற்றாமல், அவர்கள் வைத்திருக்கும் சிறு பாரத்திரத்தில் அவசரகதியில் ஓரிருமுறை மொண்டு ஊற்றி மீதியை நம்மிடம் கொடுத்துவிடுகின்றனர் பட்டர்ஸ்வாமிகள். அதுபோலவே, நாம நக்ஷத்திரம் கேட்கும்போது இரண்டு பேருக்கு மேல் குடும்பத்தினர் பெயரை நாம் சொல்லத் தொடங்கும்போதே இடைமறித்து ஸஹ குடும்பானாம் என்று முடித்தும் விடுகின்றனர்! 


பானக நரசிம்மரை தரிசித்துக் கொண்டு அருகிலிருக்கும் பாதை வழியே சற்று மேலே சென்றால் ராஜ்யலக்ஷ்மி தாயார் சந்நிதியும், ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதியும் உள்ளன.  பாறையிலேயே செதுக்கப்பட்டு செந்தூரம் பூசி நாணயங்கள் ஒட்டப்பட்ட பெரிய ஆஞ்சநேயர் சிற்பமும் கண்ணைக் கவர்கிறது.  இந்த மலையிலிருந்து கீழே உள்ள கோவிலும் கோவிலைச் சுற்றி உள்ள மங்களகிரி ஊரும் அற்புதமாக காட்சி அளிக்கின்றன.


   


இதற்குள் நேரம் ஆகி, பானகமெல்லாம் ஜீரணமாகி வயிற்றுப்பூஜைக்கு மணி அடிக்க ஆரம்பித்துவிட்டதால் மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு நாங்கள் செல்லவில்லை. யாரும் அதைப்பற்றி அவ்வளவாகப் பேசவும் இல்லை. அடிவாரம் வந்து சுடச்சுட பொங்கல், வடை, கேசரி, காபி என ஒரு கை பார்த்தோம்.  (இதற்குத்தான் அமிர்தம் + திவ்யதேச யாத்ரா என்று பெயர் சூட்டினார்களோ?).  அடுத்த க்ஷேத்ரத்திற்கு செல்ல வண்டி ஏறினோம்.  வண்டி ஏறும்போதுதான் தெரிந்தது, சற்று அருகில் வேறு இடத்தில் அறைகள் கொடுக்கப்பட்டிருந்த சிலர் காத்திருக்கும் நேரத்தில் கடைக்குச் சென்று பிரசித்திபெற்ற மங்களகிரி காட்டன் சேலைகள் வாங்கி விட்டனர் என்ற விஷயம்.  இது எப்படி மற்ற பெண்மணிகளுக்குத் தெரியாமல் போனது என்பது எங்கள் கண்ணெதிரே நிகழ்ந்த மற்றுமோர் அதிசயம்.


அங்கிருந்து சுமார் நான்கு மணிநேர பயணத்திற்குப்பின் வேதாத்ரி என்னும் இடத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ யோகானந்த லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமி கோவில் சென்றடைந்தோம்.  அங்குள்ள மண்டபத்தில் அனைவருக்கும் அருமையான மதிய உணவு பறிமாறப்பட்டது.  உணவுக்குப்பின், கோவில் திறந்திருப்பதாகக் கேள்விப்பட்டு கோவிலுக்குச் சென்றோம். என்ன அதிசயம்! இந்த ஒரு க்ஷேத்ரமே பஞ்ச நரசிம்மர்கள் அருள்பாலிக்கும் இடம் என்பதை அறிந்து வியப்படைந்தோம்.


     


தரையில் வைத்தால் கால் பொசுங்கும் வெய்யிலிலும் மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கோவிலுக்குள் நிழலில் குழந்தை குட்டிகள் சகிதம் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததையும் கண்டோம். அருகில் கிருஷ்ணவேணி என்றழைக்கப்படும் கிருஷ்ணா நதி ஓடிக்கொண்டிருந்தாலும் காற்றில் அதன் குளுமை தென்படவில்லை. கோவில் மாலை ஐந்தரை-ஆறு மணிக்குள் மூடப்படும் என்பதால் அந்த வெய்யிலிலும் பக்தி சிரத்தையோடு வந்து வழிபடுவதைக் காண்கையில் இறை நம்பிக்கை கொண்ட மனிதர்கள் உள்ளவரையில் நம் ஊரில் தற்போது காணப்படும் சனாதன எதிர்ப்பு எல்லாம் கூடிய விரைவில் காணாமல் போகும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.


   


மூல மூர்த்தி ஸ்ரீ யோக நரசிம்மராகவும், அருகில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மராகவும் சந்நிதியில் உள்ளார்.  வெளியில் உள்ள மலை உச்சியில் ஜ்வாலா நரசிம்மராக அருட்காட்சி தருகிறார். மேலும் கிருஷ்ணா ஆற்றில் மிகப்பெரிய சாளக்ராம நரசிம்மராகவும் நீரில் இருந்துகொண்டே அருள்பாலிக்கிறார்.  இவற்றைத் தவிர சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கருடாத்திரி மலையில் வீர நரசிம்மராகவும் எழுந்தருளியிருக்கிறார்.  இவரைத் தவிர மற்ற நான்கு நரசிம்ம மூர்த்திகளையும் தாயாரையும் சேவித்துக்கொண்டு ஆலமரம், குரங்குகள், அரணை, நம் ஊரைப் போல் இல்லாமல் கண்ணுக்குத் தெரியாமல் ஆனால் கடித்தால் மட்டும் உணரும் மிகச் சிறிய கொசுக்கள் போன்ற இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடத்தை விட்டு கிளம்ப மனமில்லாமல் கிளம்பினோம்.  சாப்பாடு சற்று நேரத்திற்கு முன்னர் தான் முடிந்திருந்தாலும், ஸ்வாமி தரிசனம் முடிந்து வந்ததுமே  காபியும் தயாராக இருந்தது. காபிக்கு மாத்திரம் நேரம் காலம் கிடையாது. எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் ஸஜ்ஜனம் இருக்கையில் கவலை ஏது!


உணவும் உண்டு காபியும் குடித்த களைப்பு தீர குளிர்சாதன பேருந்தில் அவரவர் விருப்பத்திற்கேற்ப அரட்டையிலோ காதில் பொருந்தும் கருவியின் துணையோடு பாட்டு கேட்டுக்கொண்டோ பயணம் செய்து இரவு மட்டப்பள்ளி சென்றடைந்தோம்.  அருகருகான இரு வேறு இடங்களில் ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் தங்கினோம்.  விடுதியிலேயே இரவு உணவு பாக்குமட்டை தட்டுகளில் கொண்டுதரப்பட்டது.  அதிகாலை விஸ்வரூப தரிசனம் உண்டு என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கேற்ப அலாரம் வைத்துக்கொண்டு உறங்கச் சென்றோம்.  இப்படியாக முதல் நாள் நல்லபடியாக முடிந்தது.


சிற்றஞ்சிறுகாலே சென்றவனை சேவிக்க முனைந்தாலும் நமக்கு முன்னரே எப்படித்தான் இத்தனைபேர் தயாராகிறார்களோ என்னும்படி விஸ்வரூப தரிசனத்திற்கான இடங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டு அடுத்த சேவையான திருமஞ்சனத்திற்குத்தான் இடம் கிடைத்தது.  


மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற சொல்லிற்கேற்ப பரம பக்தனுக்கு தானே காட்சி தந்த பரமனின் இந்த ஆலயம் சுவாரசியமான தல புராணங்களைக் கொண்டது.  அவற்றை தனியே இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.  சிறிய குகை போன்ற இடுக்கில் நுழைந்து இருக்கும் இடத்தில் ஒரு சுற்றுக்கு பத்து பதினைந்து பேராக உள்ளே அனுப்புகிறார்கள்.  ஒரு அடி உயரமே ஆன பாறையில் செதுக்கப்பட்ட நரசிம்மர் சிலைக்கு திருமஞ்சனம் செய்வதைக் மிக அருகில் நின்று கண்ணாரக் காண முடிந்தது நம் மூதாதையர் செய்த புண்ணியத்தின் பலன் என்றுதான் தோன்றுகிறது. அருகில் இருக்கும் பிரகல்லாதரை காலை திருமஞ்சன நேரத்தில் மட்டும்தான் காணமுடியும் என்பதை அறிந்தபோது மனம் இன்னும் நிறைவடைந்தது.  சிறு சிறு குழுக்களாக திருமஞ்சன தரிசனம் செய்வித்த பின்னர் அனைவரையும் வெளியில் உட்கார வைத்து பின்னர் அலங்காரம் முடிந்த பின்னர் மீண்டும் உள்ளை அழைத்து சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்விக்கிறார்கள்.  மிகத் திருப்தியான தரிசனம் முடிந்த கையோடு வெளியில் வந்து கிருஷ்ணா நதி தீரத்தில் குளிர்ந்த காலை நேரத்தில் சுடச்சுட காபியும் குடித்துக்கொண்டே போட்டோ எடுப்பது எவ்வளவு சுகமான அனுபவம்!


   


மட்டப்பள்ளி உண்மையில் மகத்தான பள்ளி என்பதை நேரில் கண்டுகொண்டு அடுத்த க்ஷேத்ரமான கேதாவரம் நோக்கி புறப்பட்டோம்.  காலைச் சிற்றுண்டி முடிததுக் கொண்டுதான், சந்தேகம் வேண்டாம்!


தெலுங்கானா பிரதேசத்தின் இயற்கை வளம் பிரமிக்க வைக்கிறது.  சுற்றிலும் ஆற்றுப்படுகை என்பதால் பசுமைக்குப் பஞ்சமே இல்லை. பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பாடிய பாரதி இங்கு பிறந்திருந்தால் நந்தலாலாவுக்கு பதிலாக நரசிம்மா என்றே பாடியிருப்பார்.  நீங்களே பாருங்கள்.



கிட்டத்தட்ட இரண்டு மணிநேர பயணத்திற்குப் பின் கேதாவரம் கோவிலுக்குச் செல்வதற்காக கிருஷ்ணவேணி ஆற்றின் மறுபக்கத்தில் அமைந்திருந்த இடத்திற்கு சென்றடைந்தோம்.  இங்கிருந்து படகில் அக்கரையை அடைந்து பின்னர் மலை ஏற வேண்டும்.


சுமார் 15-20 நிமிட படகு சவாரிக்குப் பின் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அடிவாரம் அடைந்து அங்கிருந்து 200-250 படிகள் ஏற வேண்டும்.  ஆனால் நம் பயணிகளின் சராசரி வயதை மனதில் கொண்டு படகு சவாரி முடியும் இடத்திலிருந்தே வாகன சவாரியும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.   டிராக்டர் அல்லது குட்டி யானை என்றழைக்கப்படும் சிறிய டிரக் வண்டியில் பயணம்.  பார்ப்பதற்கு எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் தோன்றினாலும், ஏறி இறங்குவதற்கும் சரி, பயணிப்பதற்கும் சரி, பழக்கமில்லாதவர்களுக்கு சற்று சிரமமான அனுபவம் தான் என்பதை நேரில் அறிந்து கொண்ட இடம் இது.









காட்டின் நடுவே மலைப்பாதையில் நடந்து ஏறுவதை விட வண்டியில் உட்கார்ந்தோ நின்றோ ஏறுவது இன்னமும் சிரமம் என்பதை இவ்விடததில் தெரிந்துகொள்ளலாம்.  சீரற்ற கற்களின் மேலும், மழைநீரால் குழிவிழுந்த மண்ணிலும் இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் சாய்ந்து உடம்பை ஒரு குலுக்கு குலுக்கின்றது இப்பயணம்.  


கேதாவரம் கோவில் இப்பேது நன்றாக சீரமைக்கப்பட்டு வண்ணங்கள் ஏற்று புதுப்பொலிவுடன் மலையின் மேல் பார்ப்பதற்கே ரம்யமாக விளங்குகிறது.  சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் நரசிம்மரையும் செஞ்சுலக்ஷ்மி தாயாரையும் தனித்தனி சந்நிதிகளில் தரிசிக்கலாம். உயரத்தில் உள்ள கோவிலில் இருந்து அகண்ட கிருஷ்ணா நதியையும் அதன் கரையில் அமைந்துள்ள கிராமத்து வீடுகளையும் காண்பதே ஒரு அற்புதக் காட்சி.  பெரிய ஏரி போல் காட்சி தருகிறது கிருஷ்ணா நதி.


           


இக்கோவிலில் தரிசனம் பட்டர் ஸ்வாமிகளின் வருகையைப் பொருத்தே அமையும்.  முன்னதாகவே தகவல் தொடுத்து வைத்தால் நாம் வரும் நேரத்திற்கு அவரும் வந்து தரிசனம் செய்து வைப்பார்.  தகவலின்றி பிரயாணம் மேற்கொள்வது நல்லதல்ல.  குகை போல் உள்ள சிறிய சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வஜ்ர நரசிம்ம ஸ்வாமியை தரிசித்துக்கொண்டபின் சற்று உயரத்தில் அமைந்துள்ள மற்றொரு சந்நிதியில் தாயார் செஞ்சுலக்ஷ்மை அம்மகாருவையும் தரிசனம் செய்து கொண்டு இறங்கி ஏறிய களைப்பு தீர சிறிது நேரம் இளைப்பாறி, மீண்டும் வேண்டாவிருப்பமாக அதே டிராக்டரிலேயோ குட்டியானையின் மீதோ வந்த வழியே இறங்கி நதியைக் கடக்க வேண்டியதுதான்.


சுற்றுமுற்றும் எந்தவிதமான கடை கண்ணியும் கிடையாது.  தண்ணீர் கூட கிடைக்காது.  வேறு வழியின்றி இரண்டு மணிநேரம் வெய்யிலில் வாடி வதங்கி திரும்பும் வழியில் நடு நதியில் படகிலிருந்தே பாட்டிலில் கிருஷ்ணா நதி நீர் நிரப்பி மீன்கள் எதுவும் இல்லையென்று உறுதி செய்துகொண்டு குடித்தோம்.  நன்றாகத்தான் இருந்தது.  மீண்டும் பேருந்தில் ஏறி கண்ணில் தென்பட்ட முதல் கடையில் சில்லென்று பாட்டில்களில் தண்ணீரும் கொரிக்க ஹல்திராம் சன்னா பாக்கெட்டுகளும் வாங்கிய பின்னர்தான் அது மதுக்கடை என்பதையே தெரிந்து கொண்டோம்!  நரசிம்மர் மன்னிப்பார் என்ற நம்பிக்கையுடன் மட்டப்பள்ளி வந்து சேர்ந்தோம்.  


மதிய உணவுக்குப் பின்னர் மட்டப்பள்ளியில் தங்கியிருந்து அறைகளிலிருந்து உடைமைகளை எடுத்துக்கொண்டு வாடப்பள்ளி (வாட பல்லி?) செல்ல பேருந்து ஏறினோம்.  பசுமை நிறைந்த குறுகலான பாதைகள் வழியாக ஒரு வழியாக நெடுஞ்சாலை அடைந்து வண்டி வேகம் பிடித்தது. மாலை ஆறு மணி அளவில் கோவில் சென்றடைந்தோம்.


அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக அறியப்படும் இக்கோவில் நரசிம்மர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.  ஹிரண்யனை வதம் செய்துவிட்டு வரும் வழியில் இங்கு தங்கியிருக்கும்போது உக்ரமாக இருந்ததனால் மேல்மூச்சு வாங்கியபடி இருந்ததாக நம்பப்படும் இம்மூர்த்தி, ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்போதும் மூச்சுவிட்டுக்கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இவரது சந்நிதியில் இரு விளக்குகள் எப்போதும் ஒளிர்ந்த வண்ணம் உள்ளன.  அவரது முகத்தின் அருகே உள்ள விளக்கின் ஜோதி காற்றில் அசைவதையும், அவரது பாதத்தின் அருகில் உள்ள விளக்கின் ஜோதி அசைவற்று நிற்பதையும் இன்றும் காணலாம்.எந்த ஒரு நல்ல காரியத்தையோ, யாத்திரையோ தொடங்கும் முன் இங்கு வந்து வழிபட்டு நரசிம்மர் அருளுடன் தொடங்கினால் காரியம் நல்லபடியாக நிறைவேறும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே பரவலாக இருக்கிறது.


                                    


இவ்விளக்குகளை தொடர்ந்து ஒளிரச்செய்ய விருப்பமுள்ள பக்தர்களிடமிருந்து ஓராண்டுக்கு ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு சங்கல்பம் செய்கிறார்கள். இவ்வாறு செய்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.


இவ்வாறாக கடைசியாக வாடப்பள்ளி நரசிம்மருடன் பஞ்ச நரசிம்மரையும் சேவித்துக்கொண்டு அடுத்த க்ஷேத்ரமான பத்ராசலம் செல்லத் தயாரானோம்.  வழியில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டோம். நாள் முழுவதும் கடும் வெய்யிலில் வெவ்வேறு வாகனங்களில் பயணம் செய்த களைப்பு அனைவரையும் அடுத்த நொடியே கண்ணயர வைத்தது.  



மூன்றாம் நாள் அதிகாலை இரண்டரை மணிக்கு பத்ராசலம் சென்றடைந்தோம்.  நாலரை மணிக்கு விஸ்வரூப தரிசனம் என்பதனால் விருப்பமுள்ளவர்கள் அருகிலேயே உள்ள கோதாவரி நதியில் நீராடி கோவிலுக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தப் பட்டோம்.  அதன்படியே அவசர அவசரமாக சாமான்களை அறைகளில் வைத்து பூட்டிவிட்டு நதிக்கரைக்குப் புறப்பட்டோம்.  எதற்கும் விசாரித்துக்கொண்டு செல்லலாம் என்ற விடுதி மேலாளரை விசாரித்ததில், நதியில் நீர்ப்பெருக்கு அதிகமாகி முன்தினம் ஓரிருவர் அடித்துச் செல்லப்பட்டதால் நதியில் நீராட தடைவிதித்திருப்பதாகக் கூறினார்.  


எனவே அறையிலேயே குளித்து கோவிலுக்குச் சென்றோம்.  அன்று விடுமுறை (காந்தி ஜயந்தி) தினமாதலால் ஏற்கெனவே பக்தர்கள் குவிந்திருந்தனர்.  200 ரூபாய் கட்டண தரிசனத்திற்கே அரை மணிநேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. தரிசனம் முடிந்து அறைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் எப்போது வர முடியுமோ என்ற எண்ணத்தில இன்னுமொருமுறை தரிசனம் செய்தால் என்ன என்றெண்ணி மீண்டும் கோவிலுக்குச் சென்றோம்.  காலையில் கண்டதைவிட பலமடங்கு கூட்டம் அதிகமாகியிருந்தது. விசாரித்ததில் ஸஹஸ்ரநாம சேவை வரிசையில் சென்றால் சுமார் ஒரு மணிநேரத்திற்குள் தரிசனம் கிடைக்கலாம் என்று தெரியவே, 300 ரூபாய் கொடுத்து அந்த சேவையில் சேர்ந்து கொண்டோம்.


   


பகவான் தரிசனம், அதுவும் பத்ராசல ராமர் தரிசனம் அவ்வளவு எளிதா என்ன? எங்களை சோதிப்பது போலவே அன்று பார்த்து உயர்நீதிமன்ற நீதியரசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் என முக்கியப் பிரமுகர்கள் வரவே, ராமதாசரைப் போலவே பக்தர்கள் அனைவரையும் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கூண்டில் அடைத்துவிட்டனர் கோவில் நிர்வாகிகள்.  மேளதாளத்துடன் அவர்களுக்கு கிடைத்த மரியாதையையும் விரைவு தரிசனத்தையும் பொறாமையுடன் பார்த்தவாறே நெரிசலில் நின்றோம் நாங்கள். என்னதான் நிற்கும் நேரத்தில் தெரிந்த ஸ்லோகங்களையெல்லாம் பாராயணம் செய்தாலும் பொறுமையிழந்த பொதுமக்களின் கூச்சலும் ஆரவாரமும் கவனத்தை கலைத்தன.


ஒரு வழியாக வி.ஐ.பிக்கள் நகர்ந்தபின்னர் காத்திருந்தது வீணாகாமல் முத்தங்கியில் மிக நல்ல தரிசனம் தந்தார் சீதையை மடியிலும் லக்ஷ்மணரை அருகிலும் கொண்டிருந்த ராமர்.  மலை மேல் அமைந்த பழைய கால சிறிய கோவில் காலத்திற்கேற்ப மாறுதல்களுக்கு ஆளாகியிருந்ததால் ஒரு நல்ல புகைப்படம் எடுக்க வசதியான இடமே இல்லை.  கிடைத்த இடத்தில் வந்ததற்கு அடையாளமாக ஒன்றிரண்டு படங்கள் எடுத்துகொண்டு ராமரை நமஸ்கரித்துக்கொண்டு புறப்பட்டோம்.


கோவிலிலேயே மணி பத்து-பத்தரை ஆகிவிட்டதால் சிற்றுண்டி இல்லாமல் நேராக மதிய உணவே வடை பாயசம் இனிப்புடன் விருந்தாக அளிக்கப்பட்டது.  அங்கிருந்து கோதாவரி நதிக்கரையில் அமைந்த பர்ணசாலைக்குச் சென்றோம்.


இங்கு இருந்த ஆசிரமத்தில் இருந்துதான் காவலுக்கு இருந்த லக்ஷ்மணரை மாயமான் மூலமாக திசை திருப்பி சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றான். இங்குள்ள கோவிலில் தாயார் சீதையின் பாதச்சுவடுகள் இருப்பதாக அறிந்தோம். ஆனால் நாங்கள் சென்றபோதே கோவில் மூடிவிட்டதால், மாலை மீண்டும் திறக்கும் வரை காக்க எங்களுக்கு நேரமில்லாததல் பர்ணசாலையில் இராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளை மட்டும் கண்டு திரும்பினோம்.


 


இதுவரை கண்ட கோவில்கள் போல் இல்லாமல் இந்த பர்ணசாலை மட்டும் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக வரும் கண்காட்சி போல் இருக்கிறது. இங்கு எனக்கு நம் பழமொழிகளில் இரண்டை நினைவுபடுத்தும் காட்சிகள் கிடைத்தன. வழியெங்கும் பெண்கள் குவியல் குவியலாக அடர்ந்த பழுப்பு நிறத்தில் அவல் போல கொட்டிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.  விசாரித்ததில், அது இலுப்பைப்பூ என அறிந்து கொண்டோம்.  அசட்டு தித்திப்புடன் இருந்தது.  ஆலையில்லா ஊருக்கு இலுப்பைபூதான் சர்க்கரை என்பது ஏன் என்று தெரிந்துகொண்டேன்.


இங்கும் கோதாவரி அகண்ட பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.  சிறிது ப்ரோக்ஷணம் செய்து கொள்ளலாம் என்று கரையருகில் செல்ல முயன்றால் தரையில் ஏற்கெனவே பதிந்திருந்த கால் சுவடுகள் அது ஸ்திரமில்லாத புதை மணல் போல இருப்பதை உணர்த்தியது.  இருந்தும் என்னுடன் வந்த நண்பர் சோதித்துப் பார்க்கலாம் என்று காலை வைத்தால் நேராக முழங்கால் முட்டி அளவுக்கு கால் உள்ளே சென்றுவிட்டது!  விழாமல் சமாளிப்பதற்காக அடுத்த காலை வைக்க வேண்டியிருந்ததால் அதுவும் அப்படியே சென்று விட்டது.  நல்ல வேளையாக அவர் சேற்றில் விழவில்லை.  ஒரு வழியாக சமாளித்து சற்று காய்ந்திருந்த இடத்தில் காலை வைத்து மேலே ஏறி படகுத்துறைக்குச் சென்று கால்களை கழுவிக்கொண்டு வந்தார். ஆழம் தெரியாமல் காலை விடாதே என்று கோதாவரிக்கரை நினைவுபடுத்தியது.


 


இவ்வாறாக பானகத்தில் தொடங்கி இலுப்பைபூ வரை எங்கும் அலுப்பு தெரியாமல்  மிதமான இனிப்பில் தொடர்ந்த பயணம் இரவு ஏழரை மணிக்கு விஜயவாடா இரயில் நிலையம் வந்து சேர்ந்தவுடன் இனிதே முடிந்தது.  வழியில் பேருந்திலேயே இரவு உணவும் கையில் கொடுக்கப்பட்டுவிட்டதால் ஒரு கவலையும் இன்றி ரயிலேறி மறுநாள் காலை பத்திரமாக வந்து சேர்ந்தோம்.


எந்த இடத்திலும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்ட அமிர்தம் திவ்யதேசக் குழுவினரான திருவாளர்கள் அஷோக், நாராயணன், நிர்மல், சாரதி ஆகியோருக்கும் இவர்களுக்கு பக்கபலமாக துணை நின்று சமையல், சாமான், உட்பட அனைத்து விஷயங்களிலும் உதவி செய்தவர்களுக்கும், பத்திரமாக அழைத்துச்சென்று திரும்பிக் கொண்டுவந்து சேர்த்த ஓட்டுநர்களுக்கும் நம் கோடானுகோடி நன்றிகள் உரித்தாகட்டும்.  ஸ்ரீமந்நாராயணன் இவர்களோடு சேர்த்து நம்மையும் எந்தக் குறையுமில்லாமல் காத்தருள வேண்டுவோம்.


நன்றி, வணக்கம்.


அன்புடன்,


ரகுநாதன்.



Sunday, August 20, 2023

மெட்ராஸ் டு பாண்டி (நாட்டு திவ்யதேசங்கள்)

 

மெட்ராஸ் டு பாண்டி (நாட்டு திவ்யதேசங்கள்)

12-15 ஆகஸ்ட் 2023


சேவித்த ஸ்தலங்கள்.


முதல் நாள் (12.8.23 சனி)


திருமெய்யம்

திருக்கோஷ்டியூர்

திருமாலிருஞ்சோலை

திருமோகூர்


இரண்டாம் நாள் (13.8.23 ஞாயிறு)


திருப்புல்லாணி

நவதிருப்பதிகள்

- வரகுணமங்கை

- திருப்புளிங்குடி

- திருக்குளந்தை என்னும் எபருங்குளம்

- இரட்டை திருப்பதி (திருத்தொலைவிலிமங்கலம்)

- தென் திருப்பேரை

- திருக்கோளூர்

- ஆர்வார்திருநகரி


மூன்றாம் நாள் (14.8.23 திங்கள்)


நவதிருப்பதிகள்

- ஸ்ரீவைகுண்டம்

திருக்குறுங்குடி, சுற்றியுள்ள ஸ்தலங்கள்

வானமாமலை எனும் நாங்குநேரி


நான்காம் நாள் (15.8.23 செவ்வாய்)


ஸ்ரீவில்லிப்புத்தூர்

திருத்தங்கல்

கூடலழகர்


இந்த பாண்டி நாட்டு திவ்வதேசதரிசன சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற அதிர்ஷ்டசாலிகள் அனைவருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஆகஸ்ட் 11 வெள்ளி இரவு 8 மணிக்கு ICF பேருந்து நிலையத்தில் கூடும்படி ஏற்பாடு. சரியான நேரத்தில் நானும் என் மனைவியும் சென்றடைந்தோம். உண்மையில், இவ்வளவு நீளமான பேருந்து வாகனத்தை நான் இதுவரை பார்த்ததில்லை, அதில் பயணித்ததும் இல்லை. வோல்வோ டபுள் ஆக்ஸில் பேருந்தின் முன் பகுதியில் அமைந்திருந்த எங்கள் இருக்கை வசதியாக இருந்தது. பயணமும் குலுங்கல்கள் அதிர்வுகள் இல்லாமல் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. வாகனத்தின் பின்பாகத்தில் அமர்ந்தவர்களுக்கு குளிர்சாதனம் சரியாக வேலை செய்யாததால் பகல் நேர பயணத்தின்போது மிகவும் அசெளகர்யம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், திவ்ய தேச ஆலயங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்க வைத்து சற்று முன்பின் ஆனாலும் வேளா வேளைக்கு குழுவினரே தயாரித்த திவ்யமான உணவும் கிடைத்தது மிகப் பெரிய விஷயம் என்றே சொல்ல வேண்டும்.


இப்போது பயண அனுபவத்தின் சில நினைவுகள்.


2019-ஆம் ஆண்டு இறுதியில் ஒரு அரிய சூரியக் கிரகணம் நிகழ்ந்தது. Annular eclipse என்று அழைக்கப்படும் அந்த கிரகணம் தென் இந்தியாவை கடந்த போது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் அதன் உச்சநிலை தெரியும் காலம் 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் பாதை சரியாக திருமயத்தை கடந்தது. திருச்சியில் 10-15 வினாடிகள் தான், சென்னையில் இல்லவே இல்லை. அந்த நிகழ்ச்சியை நேரில் காண அப்போது நான் வந்த இடம் இந்த திருமயம் கோட்டையின் மேல் இருந்த பீரங்கி மேடைதான். ஆனால், அன்று கிரகணம் காரணமாக அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டிருந்ததால் என்னால் ஆலயங்களுக்கு செல்ல முடியவில்லை. அந்த குறை இப்பயணத்தால் தீர்ந்தது எனக்கு பெரு மகிழ்ச்சி. மேலும், இங்குள்ள பெருமாள் மற்றும் சிவன் கோவில் இரண்டும் குடைவரை கோவில்கள் - அதாவது மலைப் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோவில்கள். இந்தக் கோவில்களின் தோற்றம், சிற்பங்கள் அனைத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. ஆரம்பமே அமர்க்களம் என்ற விதத்தில் முதல் தரிசனமே இந்த இடத்திற்கு வந்தது எனக்கு நிறைவை கொடுத்தது.

 


அடுத்து நாங்கள் சேவித்த ஸ்தலமாகிய திருக்கோஷ்டியூர் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலம்
. இங்கு தான் உடையவர் என்று மிக்க பக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ ராமானுஜர் தனக்கு ரகசியமாக உபதேசிக்கப்பட்ட ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை தனது குரு திருக்கோஷ்டி நம்பியின் ஆணையை மீறி பாமரனும் பரமனடி அடைய வேண்டி அனைத்து மக்களின் நன்மை கருதி கோவில் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து அனைவரையும் அழைத்து பகிரங்கமாக உபதேசித்தார். குருவும் முதலில் கோபமடைந்தாலும் சிஷ்யனின் உன்னத நோக்கம் கண்டு வியந்து மனமிளகி மன்னித்தது மட்டுமல்லாமல், அவரை எம்பெருமானார் என்றழைத்து ஆலிங்கனம் செய்துகொண்டார். மிகக் குறுகிய பாதை வழியாக கோவில் கோபுரத்தில் குனிந்து நிமிர்ந்து வளைந்து நெளிந்து ஏறி அங்கிருக்கும் அவரது திருமேனியை தரிசிக்கும்போது ஏற்படும் பரவச உணர்ச்சி விவரிக்க இயலாத ஒன்றாகும்.






அங்கிருந்து அழகர்கோவில் வந்தபின்னர் அங்கிருந்த பூங்காவில் மதிய உணவிற்குப் பிறகு கள்ளழகரை சேவித்தோம்
. அற்புதமான சிற்பங்கள் நிறைந்த கோவில் இது. உண்மையில், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் காணப்படும் சிற்பங்கள் நம்மை வியக்கவைக்கும் வேலைப்பாட்டுடன் திகழ்கின்றன. சிறிது ஓய்விற்குப் பிறகு நேரம் கிடைக்கப்பெற்றவர்கள் அங்கிருந்து இயக்கப்படும் சிறிய பேருந்தில் பயணித்து பழமுதிர்ச்சோலை ஸ்ரீ முருகனையும் வழிபட்டு வந்தனர். ஒரு சில காரணங்களால் என்னால் முடியவில்லை.





கள்ளழகரைக் கண்டபின் அடுத்து திவ்யதேசமாக திருமோகூர் சென்றோம். மோகினி வடிவமெடுத்த பெருமாளை நினைவுகூரும் வகையில் பெயர்பெற்ற இத்தலத்தின் கோவில் மிகவும் அழகு வாய்ந்தது. சதுர வடிவிலான விமானம் கண்ணைக் கவர்கிறது. விமானம் மட்டுமல்ல, இக்கோவிலில் உள்ள மற்ற சிற்பங்களும் பிரதான வாயிற்கோபுரமும் மிக்க அழகு வாய்ந்தவை. மோகினியாய் மயக்கிய மோகனனைக் கண்ட மயக்கத்திலேயே திருப்புல்லாணி போய்ச் சேர்ந்தோம்.




இந்தப் பகுதிகளில் காலை நம்மை எழுப்புவது சேவலோ, காக்கைகளோ அல்ல. மயில்கள்! ஆம், அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்து கொண்டிருக்கும் மயில்களின் அகவல் கேட்டு தான் இரண்டு நாட்கள் நான் கண்விழித்தேன்.

இரண்டாம் நாள் அதிகாலை எழுந்து குளித்து சேதுக்கரை சென்று
, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைதிகப்பெரியவர் மூலம் அவரவர் வழக்கப்படி சங்கல்பம் செய்துகொண்டு ராமரை வழிபட்டு கடல்நீராடி தங்குமிடம் திரும்பி ஆதி ஜகந்நாதப் பெருமாளை வழிபட்டோம். இங்குள்ள கோவில்களில் சிற்பச் சிறப்பை கண்டு மாளாது. குறிப்பாக, துவார பாலகர்கள் அசத்துகிறார்கள். நிஜமாகவே சர்வ வல்லமை பெற்ற அரசனுக்கு மெய்க்காப்பாளராக இருப்பர் ஆஜானுபாகுவாக இருந்தால் எப்படி சிறக்குமோ அதுபோல அத்தனை கோவில்களிலும் துவாரபாலகர்கள் மிக அழகாக வடிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த காலத்து கலைத்திறனைக் காண்கையில் இப்போது அந்த திறமைகள் சிறிதுசிறிதாக மறக்கப்பட்டுவருகின்றன என்பது கசப்பான உண்மை. அங்குள்ள தர்ப்ப சயன ராமர் சந்நிதியில் மனதார ஓ ராமா நீ நாமம் பாடல் பாடியது மனதுக்கு மிக்க நிறைவை அளித்தது.





காலைச்சிற்றுண்டி முடித்து தென்நாட்டு நவதிருப்பதி தலங்களை தரிசிக்க ஆயத்தமானோம்
. செல்லப்போகும் இடங்கள் குறுகிய பாதைகளிலும் சிற்றாறுகளின் இரு பக்கங்களிலும் அமைந்திருப்பதால் எங்கள் பெரிய பேருந்திலிருந்து இறங்கி ஐந்து சிற்றுந்துகளில் (van) பயணித்து நவ திருப்பதிகளில் இரண்டாவதான வரகுணமங்கை ஆலயத்திற்கு முதலில் சென்றோம். சந்திரனுக்குரியதான இத்தலத்தின் நாயகர் விஜயாசனப் பெருமாள் மிகவும் அழகாக சிறப்பான தோற்றத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். பெருமாளையும் வரகுணவல்லி தாயாரையும் சேவித்துக் கொண்டோம்.





இரண்டாவதாக நவதிருப்பதிகளுள் நான்காவதான புதனோடு சம்மந்தப்பட்ட திருப்புளிங்குடி காய்சின வேந்தர் பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். சயன கோலத்தில் இருக்கும் இப்பெருமாளுக்கு அருகில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் கண்ணைக் கவரும் பெரிய உருவில் அமைந்திருக்கிறார்கள். கர்ப்க்கிரக வாயிலில் இருந்து காணக்கிடைக்காத பெருமாளின் பாத தரிசனம் பெற வெளியில் வடக்கு பக்கத்தில் உள்ள துவாரம் மூலமாகக் காண வழி செய்திருக்கிறார்கள்.



அடுத்து மூன்றாவதாக நவதிருப்பதிகளுள் ஏழாவதான சனிபகவானுக்கு தொடர்பான திருக்குளந்தை (பெருங்குளம்) வேங்கடவாணன் என்னும் மாயக்கூத்தர் கோவிலுக்கு சென்றோம். அற்புதமான அழகான திருவுருவம். தரிசனம் முடித்துக்கொண்டு அருகிலுள்ள பூங்கா ஒன்றில் மதிய உணவு அருந்தினோம். நான்காவதாக இரட்டைத் திருப்பதிகளுள் இரண்டாவதானதும் நவதிருப்பதிகளுள் ஒன்பதாவதுமான கேது ஸ்தலமான திருத்தொலைவிலி மங்கலம் அரவிந்தலோசனரை சேவித்தோம். பிறகு ஐந்தாவதாக ராகு ஸ்தலமான இரட்டைத் திருப்பதிகளுள் முதலானதானதும் நவ திருப்பதிகளுள் எட்டாவதுமான தேவர்பிரான் என்றழைக்கப்படும் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் தரிசனம் முடித்துக்கொண்டோம்.





ஆறாவதாக நாங்கள் சென்ற இடம் நவ திருப்பதிகளுள் ஆறாவதான சுக்கிரனுக்கான ஸ்தலமான தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன் ஆலயம். மீன்வடிவ நெடிய குழைகளை காதில் அணிந்திருப்பதால் மகர நெடுங்குழைக்காதன் என்று பெயர். குழைக்காது நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என இரு தாயார்கள். அடுத்து ஏழாவதாக நாங்கள் தரிசித்தது நவ திருப்பதிகளுள் நான்காவதான புதன் ஸ்தலாகிய திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள். அழகிய திருவுருவம் கொண்ட பெருமாள் இங்கு சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். குமுதவல்லி, கோளூர்வல்லி என இரண்டு தாயார்கள்.



பின்னர் எட்டாவதாக நாங்கள் தரிசித்தது நவதிருப்பதிகளுள் ஐந்தாவதான வியாழனுக்கான ஸ்தலமான திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆலயம். மிகப்பெரிய ஆலயம். அற்புதமான சிற்பங்கள். இங்குள்ள ஐந்தாயிரம் வருடத்திற்கும் மேலான உறங்காப்புளி மிகவும் புனிதமானதாகவும், லக்ஷ்மணரின் அவதாரமாகவே கருதப்படுகிறது. நம்மாழ்வார் இங்கு தஙகி அருள்பாலிக்கிறார்.

இவ்வாறு சற்று அதிக க்ஷேத்திரங்கள் தரிசனம் செய்த நல்ல நாளாக இரண்டாம் நாள் அமைந்தது. இரவு ஆழ்வார்திருநகரியில் எம்பெருமானார் சந்நிதியில் ஜீயர் ஸ்வாமிகளின் திருக்கையால் பிரசாதம் கிடைக்கப் பெற்றோம். அங்கேயே வானமாமலை ஆஸ்ரமத்தில் அறையில் தங்கி மூன்றாம் நாள் காலை மீண்டும் பெரி..ய்ய பேருந்தில் ஏறி நவதிருப்பதிகளுள் முதலலாவதான சூரியனுக்கான ஸ்தலமான ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டோம்.

இப்பயணத்தில் நாங்கள் கண்ட கோவில்களிலேயே மிகப் பெரியது இந்த ஸ்ரீவைகுண்டம் கோவில்தான். எவ்வளவு பெரியது, எத்தனை சிற்பங்கள், வேலைப்பாடுகள். இன்று வெறுமனே பராமரிக்கவே சிரமமாக இருக்கிறது. அந்த காலத்தில் எப்படித்தான் இவ்வளவு பெரிய கோவில்களைக் கட்டி பராமரித்தார்களோ தெரியவில்லை. தீவிர பக்தியும், இறைவன் சேவையில் நாட்டமும்தான் அக்கால மக்களை கோவில் திருப்பணிகளில் முழுவதுமாக ஈடுபடுத்தியிருக்கும். பக்திதான் அக்காலத்தில் ஆன்மிகத்தையும் தமிழையும் வளர்த்தது என்று சொன்னால் மிகையாகாது.

இங்குள்ள ஸ்ரீவைகுண்டநாதர் அழகாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கள்ளன் வடிவில் வந்ததாலும், உள்ள்த்தைக் கவர்வதாலும் கள்ளபிரான் என்று அழைக்கப்படும் வைகுண்டநாதருக்கு வைகுந்த நாயகி என்ற பிராட்டியார். க்ஷேத்திர வரிசை முன்பின் மாறினாலும் ஆண்டவன் அருள் பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒன்றாகவே அமையும் என்பது பெரியவர்கள் கண்ட உண்மை.

காலைச் சிற்றுண்டிக்குப் பின் திருக்குறுங்குடி பயணமானோம். போய் சேரும்போதே பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அவசரம் அவசரமாக பயணிகள் அனைவரும் அங்கு இருக்கும் சிறிய ஜீப்களில் ஒரு வண்டிக்கு எட்டு பேராக ஏறி திருமலை நம்பி கோவிலுக்குச் சென்றோம். கரடு முரடான பாதையானாலும் ஓரளவுக்கு அங்கங்கே கான்கிரீட் தடங்கள் அமைத்து ஓரளவு செளகரியம் செய்து தந்திருக்கிறார்கள். அஹோபிலம் பாவன நரசிம்மர் கோவிலுக்குச் சென்றவர்களுக்கு அந்த அளவு ஆட்டம் இல்லாத இந்தப் பாதை அவ்வளவு சிரமம் தராது எனலாம். இயற்கை நிறைந்த களக்காடு வனப்பகுதியில் ரம்யமான சூழலில் இருபது நிமிடம் மலைப்பாதை ஏறி, குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் நடந்தே ஏறவேண்டும். மலைமேல் நம்பியை மனதார வேண்டிக்கொண்டபின் திரும்பும் வழியில் இளைஞர்களும் ஆர்வலர்களும் நம்பியாற்றில் இறங்கி நீராடினர். மீண்டும் ஜீப்பில் வந்தவழியே இறங்கி பாற்கடல் நம்பிப் பெருமானை தரிசித்த பின்னர் திருமங்கையாழ்வார் சந்நிதிக்குச் சென்றோம். குளிர்ந்த காற்று உடலெங்கும் உரச, பச்சைப் பசேல் என்று நெற்பயிர் ஒருபுறம், முற்றிய நெற்கதிர் தாங்காது தலைகவிழ்ந்து மஞ்சளாக மாறிக்கொண்டிருக்கும் வயல் ஒரு புறம், வாழை மரங்கள் மற்றொரு புறம் என வியக்கும் இயற்கையின் நடுவில் அமைந்த சிறு அழகான சந்நிதி இது. எங்கும் பார்த்திராத அதிசயமாக நான்கு கிளைவிட்டு வளர்ந்த தென்னை மரத்தையும் இங்கு கண்டோம்.









பின்னர் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வட்டப்பாறை ராமானுஜர் சந்நிதிக்குச் சென்று வழிபட்டோம். ராமானுஜர் உறக்கத்தில் இருக்கும்போது அனந்தபத்மநாபப் பெருமானின் ஆணைப்படி பெரிய திருவடி கருட பகவனால் திருவனந்தபுரததிலிருந்து மீண்டும் திருக்குறுங்குடிக்கே கொண்டுவரப்பட்ட ராமானுஜருக்கு திருக்குறுங்குடி நம்பியே அவருடைய சிஷ்யர் வடுக நம்பியாக அவதரித்து தன் குருவுக்கு திருமண் காப்பு இட்டு அலங்கரித்த விசேஷ ஸ்தலம் இது. யாருக்கு கிடைக்கும் இத்தகைய பாக்கியம். இந்தப் புண்ணிய ஸ்தலத்தை தரிசிப்பதற்கே நாமும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து திருக்குறுங்குடி நம்பி கோவிலருகே உள்ள ஒரு மண்டபத்தில் சற்று தாமதமாக மதிய உணவு அருந்தினோம்.





உணவுக்குப் பின்னர் நம்பி கோவில் சென்று தரிசித்தோம். அற்புதமான இக்கோவிலில் வழிபடும்போது மறுபடியும் ஜீயர் ஸ்வாமிகள் தரிசனமும் தீர்த்தம் சடாரி பிரசாதமும் கிடைத்தது எங்கள் பாக்கியம். அழகான இரண்டு யானைகளையும் இங்கு கண்டு மகிழ்ந்தோம். சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்குறது இக்கோவிலின் வழிபாட்டு முறை. பெருமாள் கோவில் என்றாலும் உள்ளேயே ஒரு சிவன் ஆலயமும் பைரவர் சந்நிதியும் உள்ளது மட்டுமல்லாமல், கோவிலின் சாவியை இரவு பைரவரிடம் ஒப்படைத்து மீண்டும் காலையில் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நடைமுறை தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை அறிய மகிழ்ச்சியாக இருந்தது.




தரிசனம் ஆன பின்னர் நாங்குநேரி என்று இன்று அழைக்கப்படும் வானமாமலைக்கு பயணமானோம். இங்குள்ள தோதாத்ரி பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவருக்கு தினசரி செய்யப்படும் தைலாபிஷேகத் தைலமானது ஒரு கிணற்றில் சேகரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நம்பிக்கையுடன் உபயோகித்தால் எத்தகைய நோயும் தீரும் என்பது இங்குள்ள மக்களின் திடமான கருத்து.



அங்கிருந்து புறப்பட்டு பின்னிரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றடைந்தோம். கோவிலின் எதிரிலேயே உள்ள தனியார் தங்கும் அறைகளில் தங்கி காலையில் குளித்து முடித்து புஜங்க சயன கோலத்தில் உள்ள வடபத்ர சாயி பெருமாளை சேவித்துக்கொண்டு ஆண்டாள் நாச்சியாரையும் சேவித்துக்கொண்டோம். புகழ்பெற்ற கோபுர வாயிலை நிழற்படம் எடுக்கும் வழியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவையும் வாங்கிக்கொண்டு பின்னர் காலைச் சிற்றுண்டி முடித்துக்கொண்டு திருத்தங்கல் நோக்கி பயணமானோம்.

திருத்தங்கல் ஸ்தலமானது போக்குவரத்து மிக்க நெடுஞ்சாலையில் இருப்பதனால் அவசரமாக இறங்கி நுழைவாயில் சென்றடைய சாலையில் சிறிது தூரம் நடக்க வேண்டியிருந்தது. அதற்குள் கால் சூடு தாங்காமல் திணறிவிட்டோம். இங்குள்ள நின்ற நாராயணப் பெருமாளுக்கு நான்கு தேவியர். திருமார்பில் உள்ள தேவியையும் சேர்த்து அர்ச்சகர் ஐந்து தேவியர் (பஞ்ச பார்யாள்) என்று குறிப்பிட்டார். வேறு தளத்தில் உள்ள சந்நிதியில் மகாலட்சுமி தாயாரும் நல்ல உயரமாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களிலேயே இவ்வளவு உயரத்தில் நின்ற கோலத்தில் உள்ள தாயார் இவர்தான் என்று சொல்கிறார்கள். தினமும் திருமஞ்சனம் இவரது சிறப்பு. இங்கு புடவை சார்த்துவதாக வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள். நெரிசல் மிகுந்த சாலையாதலால் தரிசனம் முடித்து பேருந்து சாலையில் வருவதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே கோவிலை விட்டு புறப்பட்டோம். மீண்டும் மதிய உணவுக்காக ஸ்ரீவில்லிப்புத்தூருக்கே சென்று உணவு உட்கொண்டோம்.


உணவு என்று அங்கங்கு எளிதாக குறிப்பிட்டேனே தவிர ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு வகையாக சுவையாக சில இடங்களில் இனிப்பும் சேர்த்து அங்கங்கு பிரத்யேகமாக தயாரித்து வண்டியில் சிரத்தையாக ஏற்றி இறக்கி அனைவருக்கும் ஏற்ற வகையில் கிடைத்த இடத்தில் அனைவரையும் அமர்த்தி அது ஒரு கூடமானால் இலையிலோ அல்லது வெளியிடமானால் தட்டிலோ சரியாக வினியோகிப்பது என்பது எத்தனை சிரமம் என்பது இப்படி ஒரு பெரிய குழுவோடு சென்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்
. அவ்வகையில் இக்குழுவினருக்கு நம் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டியது நம் கடமை என்றே எண்ணுகிறேன். நான்கு நாட்கள் பயணத்தில் உணவினால் யாருக்கும் எந்த சிக்கலும் எழவில்லை என்பது இவர்களின் தரமான உழைப்புக்கு சான்று. வாழ்க இவர்களின் சீரிய பணி. இறைவன் இவர்களுக்கு வேண்டிய வரத்தை அருளட்டும் என்று வேண்டுவோம்.



உணவுக்குப் பின்னர் மதுரைமாநகருக்கு புறப்பட்டோம். நான்மாடக்கூடலானாலும் நெடுஞ்சாலை தவிர மற்ற சாலைகளெல்லாம் இனியும் பெரிதுபடுத்து முடியாத அளவுக்கு ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பேருந்திலிருந்து இறங்கி பரபரப்பான போக்குவரத்துக்கிடையே எச்சரிக்கையுடன் கவனமாக சாலைகளைக் கடந்து கூடலழகர் கோவிலுக்குச் சென்றோம். வெளியுலகின் பரபரப்பை சிறிதுகூட காட்டிக்கொடுக்காத அமைதியான சூழலில் உள்ளே கம்பீரமாக வீற்றிருக்கிறார் கூடலழகர். கூடுதல் அழகாக மிக அற்புதமான விமானம் மற்றும் இதர சிற்பங்கள். காண கண் கோடி வேண்டும் இக்கோவிலை அணுஅணுவாக ரசிப்பதற்கு. தரிசனம் முடிந்து வெளியே வரும்போது லேசாக மழை ஆரம்பித்தது. சாலை ஓரத்தில் மூடியிருந்த கடைகளுக்கு வெளியில் அத்தனை கூட்டமும் தஞ்சமடைந்தோம். சிறிது நேரத்தில் பேருந்து வரவே அத்தனை பேரும் மன நிறைவோடு வண்டி ஏறினோம்.

திரும்பும் வழியில் திருச்சி அருகே ஒரு பெட்ரோல் நிலையத்தில் கடைசி இரவு உணவு உட்கொண்டோம். அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் சென்னைக்கு வந்துவிடவே ஒவ்வொருவராக அவரவர்களுக்கு அருகில் உள்ள நிறுத்தங்களில் இறங்கிக்கொள்ள வெள்ளி இரவு தொடங்கிய பயணம் புதன் விடியற்காலை இனிதே நிறைவடைந்தது. மிகத் திறமையான ஓட்டுநர். வேகத்தடைகளை முன்கூட்டியே கவனித்து சீராக வேகத்தை கட்டுப்படுத்தியும், இவ்வளவு நீளமான வாகனத்தை வளைவுகளில் சிரமமின்றி அவர் கையாண்ட விதமும் வியக்கவைத்தது. அவருக்கும் எங்களது பாராட்டுகள், நன்றிகள்.

மத்வ மதத்தைச் சேர்ந்த எனக்கு இப்பயணம் இன்னமும் அதிகமான நிறைவு ஏற்படுத்துகிறது. ஏனென்றால், சாந்திரமான வருஷம் என்று அழைக்கப்படும் சந்திரனின் சுழற்சியைப் பின்பற்றி அமைந்த எங்கள் வருடக்கணக்கில், முப்பத்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரே வருடத்தில் அதிக மாஸம், நிஜ மாஸம் என்று ஒரு மாதம் இரண்டு முறை அனுசரிக்கும் வழக்கம் உண்டு. இவ்வருடம் அது இப்போது நிகழ்கிறது - அதிக ஸ்ராவண (ஆவணி) மாதம், பின்னர் நிஜ ஸ்ராவண மாதம் என ஒரே மாதம் இரண்டு முறை வரும். அப்படி வரும் அதிக மாஸம் மிகவும் புண்ணிய காலமாக கருதப்பட்டு ஏகப்பட்ட தான தருமங்கள், பூஜைகள், திருத்தலப் பிரயாணங்கள் ஆகியவை நடைபெறும். அப்படிப்பட்ட இந்த விசேஷ காலத்தில் திருப்புல்லாணி, மலைமேல் நம்பி, ஸ்ரீவைகுண்டம் உட்பட்ட பல திவ்ய தேசங்களை தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கும், நடத்திக்கொடுத்த ஸ்ரீ நாராயணன், அஷோக் குழுவினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்பன்

ரகுநாதன்.